குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் அருணாச்சலப்பிரதேச சுற்றுப்பயணத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தை, திபெத்தின் தென்பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் அருணாச்சலப் பிரதேச சுற்றுப் பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செயலாளர் லூ ஹாங்க், எல்லைப்பிரச்சனை குறித்து, இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய குடியரசுத் தலைவரின் அருணாச்சல பிரதேச வருகை இருதரப்பு பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சிக்கலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து இந்தியா சற்று விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.