கிர் காட்டில் 10 நாட்களில் 11 சிங்கங்கள் மரணம்; விசாரணைக்கு குஜராத் அரசு உத்தரவு

குஜராத், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கிர் காட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த 10 நாட்களில் 11 சிங்கங்களின் இறந்த உடல்கள் கிடைத்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த விசாரணைக்கு குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய கிர் (கிழக்கு) காட்டின் துணை பாதுகாப்பாளர் பி.புருஷோத்தமா, ”11 சிங்கங்களின் உடல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.

பெரும்பாலும் அவை தல்கானியா எல்லைப்பகுதிக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 11 சிங்கங்களில் 3 இள சிங்கங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு இறந்துவிட்டன. மற்றொரு இள சிங்கமும், பெண் சிங்கமொன்றும் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளன.

இரண்டு பெண் சிங்கங்கள் மற்றும் ஒரு ஆண் சிங்கத்தின் உடல்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. மூன்று சிங்கக்குட்டிகள் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டன.

இறந்த சிங்கங்களின் மாதிரிகளைச் சேகரித்து ஜூனாகத் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.

இதுகுறித்துக் கூறிய வன மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ”மாநில வனப் பாதுகாப்புக்கான தலைவர் தலைமையில் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *