தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்துக்கு பதிலளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதினார். அதில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் மேட்டூர் அணையில் தற்போது உள்ள 21.27 டி.எம்.சி தண்ணீர் விவசாய தேவைகளுக்கு போதுமானதாக இருக்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் கடிதத்துக்கு பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, கர்நாடகாவிற்கு தேவையான தண்ணீர் குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க முடியாது என்றும் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காவிரி வழக்கில் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என்றும் கூறினார்.