காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப்பிரச்சார கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார். கடைசியாக சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். ஹிமாச்சல பிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் சிம்லா சென்றிருந்தார். அங்கிருந்து டெல்லி வரும் வழியில் சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றில் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தி தமது டுவிட்டர் பக்கத்தில் சோனியா காந்தி நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.