அனைத்து மாணவர்களும் எளிதில் கற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில், தனியார் அமைப்பு சார்பில், அப்துல்கலாம் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய செங்கோட்டையன், கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறை புதிய வடிவில் கொண்டுவரப்படும் என்றும் அனைத்து மாணவர்களும் எளிதில் கற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறினார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தின்கீழ், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.