எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் ; நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீட்டிப்பு

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 9 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதித்த இடைக்கால தடை நீடிக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை, சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி டிடிவி தினகரன் தரப்புக்கும், முகுல் ரோத்தகி, சோமையாஜி ஆகியோர் அரசு தரப்புக்கும் ஆதரவாக வாதாடினர். அப்போது, சபாநாயகர் தனபால் தரப்பில், 500 பக்கங்கங்கள் கொண்ட பதில் மனுவை, அவரது வழக்கறிஞர் அரிமா சுந்தரம், தாக்கல் செய்தார். அதில், ஆட்சியை கவிழ்க்க 18 எம்.எல்.ஏ.க்களும் சதித்திட்டம் தீட்டியதாகவும், விதிகளுக்கு உட்பட்டே எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மறுத்து வாதாடிய டிடிவி தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விஷயத்தில் சபாநாயகர் நடுநிலை வகிக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். பெயர், கையெழுத்து இல்லாத ஆவணம் மூலம் கொறடா புகாரில் தகுதி நீக்கம் நடந்துள்ளதாக கூறிய அபிஷேக் சிங்வி, ஆனால், ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து வழக்கறிஞர்கள் வாதத்திற்கு பின், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், இந்த வழக்கில் உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது எனவும், இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற உத்தரவும் தொடரும் எனவும் நீதிபதி ஆணையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *