உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது மாநில தேர்தல் ஆணையம்; விரைவில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி….

உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி நடத்தவில்லை எனக்கூறி தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் ஃபெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் ஏற்கனவே ஆஜரான நிலையில், விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீண்டும் இன்று மாலை ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற இயலாததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற நோக்கம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. வார்டு வரையறை பணிகள் நிறைவடையாததால் தேர்தல் அறிவிப்பு தாமதமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளை முடித்து விரைவில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *