இந்தியாவில் எஞ்சின் இல்லாமல் அதிவிரைவாக ஓடக்கூடிய முதல் ரயில் அக்டோபர் 29ஆம் நாள் வெள்ளோட்டம் விடப்பட உள்ளது.
16பெட்டிகள் கொண்ட எஞ்சின் இல்லாத ரயிலைச் சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை தயாரித்துள்ளது. முப்பதாண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் ஓடும் சதாப்தி ரயில்கள் மணிக்கு 130கிலோமீட்டர் வேகத்தில் ஓடுபவை. புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள எஞ்சின் இல்லாத ரயில் மணிக்கு 160கிலோமிட்டர் வேகத்தில் ஓடும் திறன்பெற்றது.
இந்த ரயில் வரும் 29ஆம் நாள் தொழிற்சாலையைவிட்டு வெளியே வருகிறது. அன்றிலிருந்து 4 நாட்களுக்குத் தண்டவாளத்தில் அதிவேகமாக இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட உள்ளது. அதன்பின் மேலும் வெள்ளோட்டம் பார்ப்பதற்காக ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இப்போதுள்ள தண்டவாளங்கள் இதற்குப் பொருந்தினால் சதாப்தி ரயில்களில் செல்வதைவிட இவ்வகை ரயில்களில் பயணநேரம் 15விழுக்காடு அளவுக்குக் குறையும் எனக் கூறப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் நிற்கும்போது தானியங்கிக் கதவுகள் திறக்கும். ரயில் புறப்படுமுன் கதவுகள் மூடிக்கொள்ளும்.