ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் பெயரை நீக்கும்வரை இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அனைத்திற்கும் மாநகராட்சியே காரணம் என்பதால், மாநகராட்சி அதிகாரிகள் அல்லாத வேறு குழுவினரைக் கொண்டு வாக்காளர்கள் பெயர்களை நீக்குதல், சேர்த்தல் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் தேதி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக சார்பில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார். அதில், ஆர்.கே.நகரில் உள்ள 45 ஆயிரம் போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் வரை இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என கோரப்பட்டிருந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் கூறி, நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.