ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் -31 ம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 9 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி செய்தியாளர்களை சந்தித்தார். இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 9 -ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 18 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாகவும் ஏ.கே. ஜோதி கூறினார்.

மேலும், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி வரும் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என்றும் டிசம்பர் 31 -ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12 -ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் பணப்பட்டுவாடா புகார் காரணமாக இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *