ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாக கொண்ட சுகாதாரபுரட்சியை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து இந்திய ஆயுர்வேத மருத்துவ நிறுவனத்தை டெல்லியில் பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். பின்னர் அங்கு இருந்த மக்களிடையே பேசிய அவர், ஆயுர்வேத மருத்துவத்திற்கு புத்துயிர் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை தனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவதாகவும் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆயுர்வேத மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் மாவட்டந்தோறும் நல்ல ஆயுர்வேத மருத்துவமனைகளை ஏற்படுத்துவது என்ற உறுதிமொழியை ஆயுஷ் அமைச்சகம் ஏற்க வேண்டும் என்று கூறிய அவர், அலோபதி உள்ளிட்ட அனைத்து வகை மருத்துவமுறைகளுக்கும் மரியாதை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விவசாயிகள் மருத்துவ பயிர்களை பயிரிட ஆயுஷ் மற்றும் விவசாய அமைச்சகங்கள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை வரும் 2022ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்தும் அரசின் திட்ட இலக்கை எளிதில் அடையமுடியும் என்று தெரிவித்தார்.