ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் மானிய உதவிகளை தடையின்றி வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
நாடு முழுவதும் அரசின் மானிய உதவிகளை பெறுவதற்கும், அரசின் நலத் திட்டங்களை பயன்படுத்துவதற்கும் மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்சநீதிமன்றமும் ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது. இந்த நிலையில், குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கா விட்டாலும், ரேஷன் பொருட்களை வழங்க மறுக்கக் கூடாது என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய நுகர்வோர் மற்றும் உணவுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆதார் எண்ணை இணைக்கா விட்டாலும் மானிய உதவிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.