அரசு கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் இயக்கங்கள் மற்றும் முற்போக்கு மாணவர்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் மாணவர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், 10லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, கவின் கல்லூரியில் மதரீதியிலான துன்புறுத்தலாலேயே பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதாகவும், மத்திய அரசின் தவறான போக்கினால் மாணவர்கள் மரணம் தொடர்வதாகவும் குற்றம் சாட்டினார்.

பின்னர் பேசிய இயக்குநர் ரஞ்சித் அரசு கல்வி நிலையங்கள் எளிய மக்களிடமிருந்து வெளிவரும் படைப்பாளிகளை அழிக்கும் நிலையங்களாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்திய குடியரசுக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கவின் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *