அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான ஆகாஷ் தயாதி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்களில் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் தயாதி என்பவர் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவரது ஓட்டலில் மார்கிஸ் டெவிட் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை அங்கு பணியில் இருந்த காவலாளி வெளியில் அனுப்பியுள்ளார். இதையடுத்து நேற்றிரவு துப்பாக்கியுடன் ஓட்டலுக்குள் நுழைந்த அந்த நபர் ஆகாஷ் தயாதியை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவலாளியும் தமது துப்பாக்கியை பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் டெவிட் காயமடைந்தார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் டெவிட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *