அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள ராகுல் காந்தி, போட்டியின்றி ஒருமனதாக அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என அக்கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதற்கேற்ப, அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் ராகுலை தலைவராக நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் தனது வேட்புமனுவை நேற்று காலை தாக்கல் செய்தார். தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ள நிலையில், வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாத பட்சத்தில் அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.