ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்பு அவர் விலகல் முடிவை எடுத்துள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நீடித்து வந்தது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாகவும், ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள உபரிநிதியில் இருந்து அதிக நிதியை மத்திய அரசு கேட்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் மத்திய அரசு தரப்பில் அந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக உர்ஜித் படேல் அறிவித்துள்ளார்.அவரது மூன்றாண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இருக்கும் நிலையில் முன்னதாக ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து உடனடியாக விலக முடிவு செய்ததாக உர்ஜித் படேல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கிக்காக பணியாற்றியது தமக்கு பெருமையும் கவுரவமும் அளிப்பதாக அவர் கூறியுள்ளார். தன்னுடன் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி நிர்வாக குழு இயக்குனர்களுக்கு நன்நி தெரிவிப்பதாகவும், அவர்களது சிறப்பான எதிர்காலத்திற்கு வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதவி விலகல் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.