முக அடையாளத்தைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மூலம் வருகைப்பதிவு செய்யும் முறையை சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் ராணுவத்திற்கும், கூகுள், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படும் ஃபேஸ் ரீடிங் தொழில்நுட்பம் சார்ந்த முறை முதன் முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் தொடங்கி வைக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
முக அடையாளம் மூலம் வருகை பதிவு செய்யும் செயலியில் மாணவர்களின் புகைப்படங்கள் பெயர் விவரங்களுடன் சேமிக்கப்படும். ஆசிரியர் செல்போனில் மாணவர்களை குழுவாக படம் பிடித்தால் வகுப்புக்கு வந்திருக்கும் – வராத மாணவர்களின் விவரங்களை காண்பித்து விடும் புகைப்படம் தெளிவாக பதிவாகவில்லை என்றால் பீப் என்ற சத்தம் ஒலிக்கும் மீண்டும் படம் பிடித்து வருகையை பதிவு செய்யலாம்.
வருகை விவரங்கள் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளி கல்வித்துறை தலைமை அதிகாரி மற்றும் பெற்றோருக்கு சென்றுவிடும். தகவல்களை இணையதளத்திலும் சேமித்து வைக்கலாம். இது சோதனை முறையில் அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு ‘ஏ’ பிரிவு மாணவிகள் 54 பேரின் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 நாட்கள் சோதனைக்குப் பின் சென்னையின் மற்ற பள்ளிகளிலும், அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்