முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. பின்னர், ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடை தேர்தலின் போது, இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் அணி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர் இணைந்த நிலையில் மீண்டும் இரட்டை சிலைசின்னத்தை மீட்க முடிவு செய்தனர். இந்நிலையில் சின்னம் தொடர்பாக விரைவில் முடிவு எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து, வரும் 29-ம் தேதிக்குள் இரு தரப்பும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து அக்டோபர் 5-ம் தேதி இறுதி விசாரணை நடக்கும் எனவும், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதிக்கு பின்னர் கூடிய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியலையும் சமர்பிக்கும் படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2017-09-22