இன்று நடைபெறவுள்ள 3வது டி20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களை இழந்தது. இந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 6 ஆண்டுகளுக்குப் பின் சேப்பாக்கத்தில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

38 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்து விட்டன. இந்தப் போட்டியில் விராட் கோலி, தோனி இல்லாத போதும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் குறையவில்லை. போட்டியைக் காண தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநில ரசிகர்களும் வருகை புரிந்துள்ளனர்.

மாலை 5.30 மணிமுதல் மைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ரசிகர்களை கட்டுப்படுத்துவதற்காகவும், பாதுகாப்புக்காகவும் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *