கிரிப்டோ கரன்சிக்கள் எனப்படும் மெய்நிகர் பணங்களை கையாளுவதை நிறுத்திக் கொள்ளுமாறு வங்கிகள் மற்றும் நிதி கையாளும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் செலவாணி கொள்கை அறிவிப்பின் படி கிரிப்டோ கரன்சிக்களில் புதிதாக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் உடனடியாக தடை செய்யப்படுகின்றன. எனினும் ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் வெளியேறுவதற்காக 3 மாத அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
3 மாத காலத்திற்குள் கிரிப்டோ கரன்சிக்களை விற்று ரூபாயாகவோ வேறு வடிவிலான சொத்துக்களாகவோ மாற்றாதவர்கள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு நிதி அமைப்பின் மூலமாகவும் அவற்றை மாற்ற இயலாது. ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால் கிரிப்டோ கரன்சிக்களில் முதலீடு செய்துள்ள 50 லட்சம் இந்தியர்களின் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.