தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாலும், கிழக்கு திசைக்காற்றின் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் கூறியுள்ளது. அதே போல் தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற வாய்ப்பு உள்ளதால், அதன் பின்னரே தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு குறித்து கூற முடியும் என்று விளக்கமளித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கட்டு மற்றும் ஈரோடு சத்யமங்கலம் உள்ளிட்ட இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.