ஆந்திரத்தில் அமோக வெற்றிபெற்றுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆந்திரத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 151 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் கூட்டம் அமராவதியில், தடப்பள்ளியில் இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முறைப்படி சட்டமன்றக் குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஆந்திரப்பிரதேச ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மனை சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். வரும் 30ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார். இதனிடையே டெல்லி சென்று நாளை பிரதமர் மோடியை ஜெகன் மோகன் சந்திக்க உள்ளார்.