தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை, 30 மாவட்டங்களில் குறையாக பெய்துள்ளது. இதனால் கோடை காலத்தில் தண்ணீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழைக்காலம் இன்னும், சில நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில்,சராசரியாக 437 மி.மீ., மழை பொழிந்திருக்க வேண்டும் ஆனால், 28-ஆம் தேதி வரை, 335 மி.மீ., மட்டுமே மழை பொழிந்துள்ளது. வழக்கமாக பெய்யும் மழையை காட்டிலும், இது 23 சதவீதம் குறைவான மழையே பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே, முந்தைய ஆண்டுகளின் இயல்பு மழையை காட்டிலும் கூடுதல் மழை பொழிந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இயல்பு மழையே இந்தாண்டும் பெய்துள்ளது. மற்ற, 30 மாவட்டங்களிலும், பற்றாக்குறையான மழையே பொழிந்துள்ளது. சென்னை, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில், 50 சதவீதமும், அதற்கு மேலும் பற்றாக்குறையாக மழை பெய்துள்ளது.
கோவையில், இயல்பு மழை அளவான, 305 மி.மீ.,க்கு பதிலாக, 217 மி.மீ., மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த தகவலை கோவை வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பருவமழை குறைந்துள்ளதால் அடுத்த வரும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.