ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்திய தருண் அகர்வால் குழு என்பது அதிகாரமற்ற கமிட்டி என்றும், அரசை அறிவுறுத்த அதற்கு எந்த அதிகாரம் இல்லை என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி, வேதாந்தா குழுமம் சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை, தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் அடங்கிய அமர்வு முன், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு சட்டவிரோதம் என வாதிட்டார். தருண் அகர்வால் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்று, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு செய்து பணிகளை தொடங்க, ஸ்டெர்லைட் நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி போராட்டத்தின் பின்னணியில், நக்சலைட் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் இருப்பதாகவும், ஸ்டெர்லைட் வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதிட்டார்.
இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெர்லைட் போராட்ட பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக, ஒருபோதும் கூறவில்லை என வாதிட்டார்.
விசாரணை ஆணையங்களுக்கு உள்ள அதிகாரம், எந்தவொரு கமிட்டிக்கும் இல்லை என்றும், பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த குழு, பார்வையிட்ட குறிப்புகளைத்தான் தர வேண்டுமே தவிர, தீர்ப்புச் சொல்லவோ, முடிவு சொல்லவோ எந்த அதிகாரமும் கிடையாது என்றார்.
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வழக்கில் தன்னை ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ளும் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் முடிவெடுக்கவில்லை என வாதிட்டார்.
இதற்கு எந்த பதிலும் சொல்லாமல், நீதிபதி ஏ.கே.கோயல் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.