சென்னை, திருச்சி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போன் மூலம் தொடர்புகொண்ட ஒரு இளைஞர் சென்னை, திருச்சி விமான நிலையங்களை சிலர் குண்டுவைத்து தகர்க்கப்போவதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து இரு விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
மிரட்டல் விடுத்தவரின் செல்போன் என்னை வைத்து விசாரணை நடத்திய போது, மிரட்டல் விடுத்தது திருச்சி பூதலூரை சேர்ந்த சுப்ரமணியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்திற்கு மட்டும் கடந்த 10 நாட்களில் 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையில் நடைபெற்றது.