திருவண்ணாமலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அலினா என்ற ரஷ்ய நாட்டு இளம் பெண் கடந்த 12ஆம் தேதி முதல் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் முழுவதும் அவரது அறை திறக்கப்படாமலேயே இருந்ததால் சந்தேகமடைந்த குடியிருப்பு ஊழியர்கள் அறையின் கண்ணாடி ஜன்னலின் வழியாக பார்த்துள்ளனர். அப்போது மயங்கிய நிலையில் அலினா விழுந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக திருவண்ணாமலையைச் சேர்ந்த பாரதி, நீலகண்டன், மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய நான்கு பேரை பிடித்து, நகர காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, காவல்நிலையத்துக்கு வந்து நான்கு பேரிடமும், அப்பெண்ணுடன் தங்கியிருந்த மேலும் இரண்டு வெளிநாட்டினரிடமும் விசாரணை நடத்தினார். நான்கு பேரும் அலினாவை பாலியல் வன்கொடுமை செய்தனரா? அல்லது பணத்துக்காக அவர் மீது தாக்குதல் நடத்தினரா? என்ற கோணத்தில் டி.ஐ.ஜி விசாரணை நடத்தினார். இந்நிலையில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி ரஷ்ய இளம் பெண் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வந்து அவரின் நிலை குறித்தும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.