மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, காவிரி பற்றி ஆலோசித்ததாக அரசு கூறியது எப்படி என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், இல்லத்தில் மயங்கிக் கிடந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, தனியார் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றது ஏன் என வினா எழுப்பியுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, இட்லி சாப்பிட்டார், நடந்து சென்றார் என கூறச் சொன்னது யார்?, அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் என தினம் ஒரு தகவல் பரப்பப்பட்டது ஏன்? எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். ஆளுநரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என அமைச்சர் கூறியது பற்றி, ஆளுநர் மாளிகையின் பதில் என்ன என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.