நாடு முழுவதும் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் ஒரே தோற்றத்தில் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதாக மாற்றப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை முதல் வாகன ஓட்டுனருக்கான உரிமங்கள் ஏடிஎம் வங்கி அட்டைகளைப் போல் ஒரே வடிவத்திலும், வண்ணத்திலும் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு முத்திரை, வழங்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, ஓட்டுனரின் பெயர், ரத்த வகை, உறுப்புதானம் செய்தவரா என்ற விவரம் போன்றவை அதில் இடம் பெறும். ஓட்டுனர் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கும் போது, தானாகவே பழைய வாகன ஓட்டுனர் உரிமங்கள் புதிய ஸ்மார்ட் கார்டு வடிவத்திற்கு மேம்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.