ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் Dukhtaran-e-Milat என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவி ஆசியா அண்ட்ராபி கைது செய்யப்பட்டதை கண்டித்து, பல்வேறு இடங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் குத்வானி பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவர்களை ராணுவ வீரர்கள் பலமுறை எச்சரித்தும், கலைந்து செல்லாததால், அவர்களை நோக்கி ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இதில், அண்ட்லீப் என்ற 16 வயது சிறுமியும், இர்ஷாத் அகமது மற்றும் ஷாகீர் அகமது ஆகிய இளைஞர்களும் உயிரிழந்தனர். 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதால், வன்முறை பரவுவதை தடுக்க, குத்வானி கிராமத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.