கிறிஸ்டி ஃப்ரைடுகிராம் நிறுவனத்தில் 3ஆவது நாளாக நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில், கணக்கில் வராத மேலும் 6 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கான முட்டை உள்ளிட்ட பொருட்களை விநியோகிக்கும் கிறிஸ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திலும், அதோடு தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள அந்நிறுவனத்தில் மூன்றாவது நாளாக சோதனை தொடர்கிறது.
நேற்று கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பணமும், வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மேலும் 6 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கணக்கில் காட்டாமல் வெளிநாடுகளில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள் பற்றி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.