காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் காவல்துறையினர் இதில் பங்கேற்றனர். பெங்களூரை சேர்ந்த தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து, காவலர் நிறைவாழ்வு பயிற்சி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் நிகழ்ச்சியில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
காவலர் நிறைவாழ்வு பயிற்சியை துவக்கி வைத்துப் பேசிய முதலமைச்சர், அமைதியை நிலைநாட்டுவதிலும், சட்டம்-ஒழுங்கைப் பேணுவதிலும் காவல்துறையினர் ஆற்றி வரும் பணிகளை பாராட்டிப் பேசினார். மனிதநேயப் பணிகளையும் ஆற்றி காவல்துறையினர் பொதுமக்களின் பாராட்டைப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கேற்ப, காவல்துறையினர் தங்கள் உடல்நலனை பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். உடற்பயிற்சி, புத்தகங்களை வாசித்தல் உள்ளிட்ட பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், உயர்ந்த ஒழுக்கப் பண்புகள் உள்ளவரோடு பழக வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.