சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் ஏசியை அணைத்து வைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கூட அவ்வப்போது கோடை மழை பெய்கிறது. இதனால் ஓரளவிற்கு மக்கள் நிம்மதி அடைகின்றனர். ஆனால் சென்னையை எடுத்துக் கொண்டால் அனல் பறக்கும் வெயில்தான். சென்னை மக்கள் மழையை பார்த்தே மாதக் கணக்கு ஆகிறது. ஒரு சின்ன மழையாவது வராதா என்ற ஏக்கத்தில் சென்னை மக்கள் உள்ளனர். அத்துடன் தண்ணீர் தட்டுப்பாடும் தலைவிரித்தாடுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான ஏரிகளின் நீர்மட்டம் குறைவான அளவிலேயே உள்ளது. இதனால் சென்னை மக்கள் மேலும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தண்ணீர் சிக்கனத்திற்காக சென்னை மெட்ரோ ரயில்களில் ஏசியை அணைத்து வைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலுக்காக தினசரி 9,000 லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது. இதில் 80 சதவீத தண்ணீர் மெட்ரோவின் ஏசி பயன்பாட்டிற்காகவே செல்கிறது. இதனையடுத்து தண்ணீர் சிக்கனத்திற்காக ஏசியை அணைத்து வைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களான மதிய நேரம் மற்றும் 5 மணி அளவில் ரயிலில் ஏசி அணையை வைத்து வைக்க முடிவு செய்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், 26 டிகிரி செல்சியஸ் என்ற சீரான நிலையில் ரயிலுக்குள் வெப்பநிலையை வைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதற்கு மேல் வெப்பநிலை செல்லும்போது, ஏசியை ஆன் செய்யவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. இதன்மூலம் மெட்ரோ ரயிலுக்காக தினசரி பயன்படுத்தப்படும், தண்ணீரில் 30 சதவீதத்தை சேமிக்க முடியும் என மெட்ரோ ரயில் கருதுகிறது.
தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற மெட்ரோவின் இந்த முடிவு, ஒருபுறம் பாராட்டக்குரியதாக இருந்தாலும் மறுபுறம் கவலை தெரிவிக்கின்றனர். மெட்ரோவில் அதிக காசு கொடுத்து பயணம் செய்வதே, ஏசியில் கொஞ்ச நேரமாவது உட்கார முடியும் என்பதற்காகத் தான் என்றும், ஆனால் ஏசியை அணைத்து வைக்கும்போது நிம்மதியாக பயணம் செய்ய முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.