நிலவில் இருந்து விழுந்த ஐந்தரை கிலோ எடை கொண்ட கல், நான்கரை கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மவுரிதேனியா என்ற இடத்தில் இருந்து 6 பாகங்களைக் கொண்ட இந்தக் கல் கண்டெடுக்கப்பட்டது. இந்த ஆறு பாகங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதன் காரணமாக நிலவின் புதிர் என்று இந்தக் கல் அழைக்கப்பட்டது. விண்கல்லானது நிலவின் மேற்பரப்பில் மோதிய போது நிலவில் இருந்து சிதைந்த கல், 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு பயணித்து பூமியில் விழுந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நிலவுக் கல்லானது, அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஆர்.ஆர். ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது. அரிதிலும் அரிதாக கருதப்படும் இந்தக் கல், இந்திய மதிப்பில் நான்கரை கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.