வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உயிரிழந்த மூத்த மகனின் நினைவாக தவித்து வந்த பெற்றோர், இளைய மகனைக் கொலை செய்து, தாங்களும் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அமணாங்குப்பம் பகுதியில் வசித்து வந்த திருவேங்கடம் கடைவைத்து நடத்திவந்தார். அவரது 5 வயது மகன் நிக்கேஷ், கடந்த 4 மாதங்களுக்கு முன், மூளைக்காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மிகுந்த சோகத்தில் இருந்த அவர்கள் நேற்று, உயிரிழந்த நிக்கேஷின் 6-வது பிறந்தநாளை ஒட்டி, மனநலம் குன்றிய குழந்தைகள் இல்லத்துக்கும், முதியோர் இல்லத்துக்கும் சென்று அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பினர்.
நேற்றிரவு அக்கம்பக்கத்தினருடன் வழக்கம் போல் பேசிவிட்டு உறங்கச் சென்ற தம்பதி, மூத்த மகனின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் இரண்டரை வயதான இளையமகன் மாதேஷைக் கொன்று, தாங்களும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைக்கண்ட அவர்களது உறவினர்கள், மடியில் கிடத்தி கதறியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.