அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விருப்பம் – டிரம்ப்

அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாகவே, வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா முன் வந்திருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

தெற்கு டகோட்டா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், பல நாடுகள் தற்போது அமெரிக்காவை மதிக்கக் கற்றுக் கொண்டு விட்டதாகத் தெரிவித்தார். இந்தியா, சீனா ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடுகள் என்று தங்களைத் தாங்களே கூறி கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், இதை சொல்லிக் கொண்டு அமெரிக்காவின் மானியத்தை அவை பெற்றுக் கொள்வதாகவும் கூறினார்.

இந்த மானியத்தை நிறுத்தப் போவதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா 100 விழுக்காடு வரி விதிப்பதாகக் குற்றம்சாட்டிய டிரம்ப், தற்போது தங்களுடன் வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்ள இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், வர்த்தக கொள்கைகள் கடுமையாக்கப்பட்டதே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் முந்தைய அரசுகளுடன் இந்தியா இதுபோல் பேசியது இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

இதனிடையே அமெரிக்கா – இந்தியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. புதிய மற்றும் சிறப்பான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த இந்தியா தரப்பில் அதிக ஆர்வம் காட்டப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *