தெலுங்கானாவில் மலைப்பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 30 பேர் பலி

தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பயணிகள் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஜாகித்யாலாவிலிருந்து கொண்டகட்டு பகுதியை நோக்கி, 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு அரசுப்பேருந்து சென்றுகொண்டிருந்தது. கொண்டகட்டு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 8 சிறுவர்கள் உட்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அருகிலுள்ள கிராம மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர்.

இதனிடையே விபத்து இடத்தில் மாவட்ட ஆட்சியர் சரத், காவல் கண்காணிப்பாளர் சிந்துசர்மா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், முறையான பாரமரிப்பின்மை காரணமாகவே பேருந்து விபத்துக்குள்ளனதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *