கர்நாடகா மாநிலம் மைசூருவில் தலைமுடியை ஸ்ட்ரெய்ட்டினிங் செய்து கொண்ட பின்னர் முடி அதிகம் கொட்டியதால், கல்லூரி மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடகு மாவட்டத்தைச் சேர்ந்த நேஹா என்ற மாணவி மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள ரோஹினி என்ற அழகு நிலையத்தில் முடியை ஸ்ட்ரெய்ட்டினிங் செய்து கொண்டுள்ளார்.
இதன் பின்னர் முடி அதிகம் கொட்டவே, பெற்றோரிடம் செல்போனில் பிரச்சனையைக் கூறி மனம் வருந்தியுள்ளார். இந்த நிலையில், ஆகஸ்ட் 28ஆம் தேதி மாயமான அவர், லட்சுமண தீர்த்த நதியில் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். தலை வழுக்கையாகி விடுமோ என்ற அச்சத்தில் நேஹா தற்கொலை செய்துகொண்டதாக ஜெயலட்சுமி புரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே பெங்களூருவில் முடி வளர்ச்சிக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு 4 ஆண்டுகள் ஆகியும் முடி முளைக்காததை அடுத்து இளைஞர் ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சிகிச்சை அளித்த நிறுவனமானது, சிகிச்சைக்கான 2 லட்சம் ரூபாயை முழுவதுமாக திரும்பக் கொடுக்குமாறு உத்தரவிட்டப்பட்டது.