இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது, டீசல் விலையை குறைப்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, படகுகளை சிறைபிடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 192 படகுகள், தற்போது இலங்கையிடம் உள்ளன. இதுதவிர, நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இதுகுறித்த, மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில், இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவிக்க வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை வலியுறுத்தி, மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர். இதன் காரணமாக, ராமேஸ்வரம் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.