ஆசிய விளையாட்டுப்போட்டியின் துடுப்புப் படகுப் போட்டியில் முதலிடம் பிடித்ததன் மூலம் இந்தியா 5வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது.
இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் துடுப்பு படகுப் போட்டியில் இந்திய அணி இறுதிச் சுற்றில் பங்கேற்றது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6 நிமிடம் 17 நொடிகளில் இந்திய அணி எட்டி முதலிடம் பிடித்தது. இப்போட்டியில் சவர்ன் சிங் (Sawarn Singh), தத்து போகனால் (Dattu Bhokanal), ஓம் பிரகாஷ் (Om Prakash) சுக்மீத் சிங் (Sukhmeet Singh ) ஆகிய இந்திய வீரர்கள் அடங்கிய அணி தங்கம் வென்றது.
முன்னதாக ஒருநபர் பங்கேற்கும் இலகு ரக துடுப்புப் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த்தும், இரட்டையர் இலகுரக துடுப்புப் போட்டியில் இந்திய வீரர்கள் ரோஹித் குமார், பக்வான் தாஸ் ஆகியோரும் வெண்கலம் வென்றனர். தற்போது வரை இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 பதக்கங்களை வென்றுள்ளது.