2019 ம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை டிரம்ப் ஏற்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு இந்திய குடியரசு தின அணிவகுப்பை அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா பார்வையிட்டார். இந்தியாவின் சிறப்பு விருந்தினராக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
2016ம் ஆண்டில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேயும் 2017ம் ஆண்டில் அபுதாபி பட்டத்து இளவரசரும் 2018ம் ஆண்டில் ஆசியான் நாடுகளின் பத்து தலைவர்களும் குடியரசு தின விழாவில் பங்கேற்றனர். இந்திய- அமெரிக்க நட்புறவின் அடையாளமாக மீண்டும் அமெரிக்க அதிபர் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அழைப்பை பரிசீலித்து வருவதாகவும் அவர் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
வர்த்தக ரீதியான முரண்பாடுகள், ஈரான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடும் அமெரிக்காவின் வலியுறுத்தலும் அண்மைக்காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவை சிதைத்துள்ளன.
இந்த இடைவெளியை சரி செய்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் மீண்டும் இரு நாடுகளின் முக்கியத் தலைவர்களை ஒரே மேடையில் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.