அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 16ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 16ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் கட்சி நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டம் ரீதியாக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அதிமுக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் பல பிரிவுகள் இருக்கும் நிலையில், மற்ற அணியிலிருக்கும் தொண்டர்களையும் பிரதான அதிமுகவுக்க இழுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஈடுபட்டுள்ளனர். பாஜக தனது தேர்தல் பணிகளை திட்டமிட்டு தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவும் அதனை பின்தொடர்ந்து காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.