ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டை நிறைவு செய்து நேற்று இரவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா அரசு திட்டமிட்டு இந்தியை திணிக்கிறது. சமஸ்கிருதத்தை புகட்டுகிறது. ஆனால் பெரியார், அண்ணா, கலைஞரின் வாரிசுகள் நாம் இருக்கும் வரை தமிழகத்தில் அவர்கள் கால் பதிக்க முடியாது என்பதை உணர்த்தும் மாநாடாக இது அமைந்திருக்கிறது.
தமிழக அரசியலில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. அறிவியல்படி வெற்றிடம் உடனடியாக நிரப்பப்பட்டு விடும். எனவே வெற்றிடம் எதுவும் இல்லை. தி.மு.க.வில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. ஊழல் நிறைந்த இந்த ஆட்சி இன்னும் ஒருவாரத்தில் இருக்காது. இந்த ஆட்சியை கலைத்து நாம் ஆட்சியை பிடிக்கப்போவது இல்லை. சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கலைக்க முடியும். ரூ.3 கோடி தருகிறேன் என்றால் வரப்போகிறார்கள். ஆனால் பணம் கொடுத்து ஆட்சியை பிடித்தால் மக்களைப்பற்றி சிந்திக்க முடியுமா? எனவே நாம் ஆட்சியை கலைக்க மாட்டோம்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும். தீர்ப்பு வந்தால் ஆட்சி கலையும். 6 மாதம் கவர்னர் ஆட்சி. அடுத்து பொதுத்தேர்தல். யாருடைய தயவும் இன்றி முழு பலத்துடன் ஆட்சியில் அமர்வோம். அதற்கு பின்னர் 30 ஆண்டுகள் யாரும் நம்மை அசைக்க முடியாது.