ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மீனவர்கள் சபினன் மற்றும் ஜூடு ஆகியோர் ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாக கூறியுள்ளார். அவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையில் மீனவர்களின் போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காணாமல்போன மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.