மணல் விற்பனையில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை; எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

மணல் விற்பனையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர் துரைக்கண்ணு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார். விவசாயிகளை பாதிக்கும் எந்த முயற்சியையும், விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என்றும் அவர் கூறினார். மேலும் மணல் விற்பனையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும், தட்டுப்பாடு காரணமாகவே மணல் விலை உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வரலாற்று வெற்றியை பெறுவோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *