தமிழகத்திற்கு வரும் 15ஆம் தேதி ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தமிழகம் நோக்கி நகர்கிறது. வரும் 15ஆம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா இடையே புயல் கரையைக் கடக்கும்போது, ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால்  தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 5.30 மணியளவில் புயலாக மாறிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தாய்லாந்து நாட்டு பரிந்துரைப்படி, இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு வடகிழக்கே 990 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருப்பதாக, இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் கஜா புயல், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும், அடுத்த 3 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் காரணமாக, நாளை அதிகாலை முதல் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், வரும் நவம்பர் 14ஆம் தேதி மாலை முதல் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நவம்பர் 15ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு, ரெட் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது.

தீவிர புயலாக உருமாறும் கஜா, வரும் 15ஆம் தேதி முற்பகலில் வலுவிழந்து, புயலாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக நாளை முதல் 15ஆம் தேதி வரை வங்கக் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *