ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி கேட்பதாக வெளியான தகவல் தவறு

ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு 3.6 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் கேட்பதாக வெளியான தகவல் தவறு என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே செலாவணிக் கொள்கை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் எழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது நிதித்துறையில் மிகமோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பேசியதால், கருத்து மோதல் இருப்பது பகிரங்கமாக வெளிப்பட்டது. இந்நிலையில், மோடி அரசு ரிசர்வ் வங்கியை கைப்பற்றி, கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியிருந்தார்.

நிதிப் பற்றாக்குறை நெருக்கடியில் மத்திய அரசு இருப்பதாகவும், தேர்தல் வர இருப்பதால் திட்டச்செலவுகளை அதிகரிக்க எண்ணுவதாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு வேறு வழியில்லாததால், ரிசர்வ் வங்கியின் சேம இருப்பில் இருந்து 1 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கேட்பதாகவும் ப.சிதம்பரம் புகார் கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், 1 லட்சம் கோடி ரூபாய் அல்லது 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை கைமாற்றித் தருமாறு ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் திட்டம் ஏதும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தவறான தகவல்களின் அடிப்படையில் ஊகங்கள் செய்யப்படுவதாகவும், அரசின் நிதிக் கணக்கீடுகள் முறையான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார்.

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 2013-14 நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருந்ததாகவும், ஆனால் 2014-15 நிதியாண்டில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு, 2018-19 நிதியாண்டில் 3.3 சதவீதத்திற்குள் நிதி பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும் எனவும் கார்க் விளக்கம் அளித்துள்ளார். நிதிநிலை அறிக்கையிலே வரையறுக்கப்பட்ட, நிதிச்சந்தைகள் மூலம் 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரட்டும் வாய்ப்பைக் கூட அரசு இந்த ஆண்டு பயன்படுத்தவில்லை எனவும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *