புயல் பாதிப்புகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் செயல்படுமாறு தமிழக அரசை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு முறை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கும், வீடு, உடைமைகள், கால்நடைகளை இழந்த மக்களுக்கும், சிகிச்சை பெறுவோர்க்கும் உரிய நிவாரணமும் இழப்பீடும் விரைந்து கிடைக்க வேண்டும் என்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்போருக்கு இயல்பு நிலை திரும்பும் வரை உணவு, உடை, படுக்கை வசதி, மருத்துவ வசதி போன்றவை போதுமான அளவுக்கு குறையேதுமின்றிச் செய்து தரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.