திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயல் கடந்து சென்றபோது சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் சாய்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நேற்றிரவில் இருந்தே இலேசான மழை பெய்து வந்தது. இன்று காலையில் புயல் கடந்துசென்ற நேரத்தில் வேகமாகக் காற்று வீசியதுடன் மழையும் பெய்தது.
புயலின் தாக்கத்தால் திண்டுக்கல்லில் பலத்த மழை பெய்தது. அப்போது காற்றும் வேகமாக வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. திண்டுக்கல் தலைமை அஞ்சலகம் அருகில் ஒரு மரம் வேருடன் சாலையில் சாய்ந்து விழுந்தது.
சாலையோரங்களில் சாய்ந்து விழுந்துள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. புயல்மழையால் சாலையில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. கடைகளும் வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தொலைத்தொடர்புக் கோபுரங்கள் சாய்ந்துள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஆத்துமேடு என்னுமிடத்தில் ஒரு கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்புக் கோபுரம் காற்றின் வேகத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்துள்ளது.