கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ள மங்களம்கொம்பு கிராமத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே, கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் மங்களம்கொம்பு கிராமம் அமைந்துள்ளது.
அங்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் வீட்டில் அதிகாலையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், அவரும் அவரது மனைவி மஞ்சுளா, மகள் விஷ்ணுப்ரியா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
மகளின் படிப்புக்காக சின்னாளபட்டியில் குடியிருந்து வந்த நிலையில், விடுமுறைக்காக நேற்று மங்களம்கொம்பு வந்துள்ளனர். இரவு கேஸ் சிலிண்டரை சரியாக மூடிவைக்காததால் கேஸ் கசிந்ததாகவும், அதை உணராமல் அதிகாலையில் தேநீர் போடுவதற்காக அடுப்பை பற்றவைத்தபோது வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் உயிரிழந்த கணேசன், கமனூர் ஊராட்சி தலைவராக இருந்தபோது, சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான தேசிய விருதுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.