சேலத்தில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்
சேலத்தை அடுத்த வீராணத்தைச் சேர்ந்தவர் கதிர் வேல் இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவரைப் சேலம் உதவி ஆணையர் சூரிய முர்த்திதலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் காரிப்பட்டியைச் சேர்ந்த முறுக்கு வியாபாரியான கணேஷ் என்பவர் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொல்லப்பட்ட வழக்கிலும் கதிர்வேலுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கதிர்வேல் உள்ளிட்ட ரவுடிகள் காரிப்பாட்டியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் இன்று அதிகாலையில் அவர்களை பிடிக்க காரிப்பட்டி ஆய்வாளர் சுப்ரமணி, உதவி ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் போலீசார் சென்றனர். அப்போது கதிர்வேல் உள்ளிட்டோர் கொடுவாள் மற்றும் வீச்சரிவாளால் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆய்வாளர் சுப்ரமணி, உதவி ஆய்வாளர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு ஆய்வாளர் சுப்ரமணி துப்பாக்கியால் சுட்டதையடுத்து கதிர்வேல் உயிரிழந்தார்.
என்கவுண்டரை தொடர்ந்து தப்பி ஓடிய மூன்று ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். தற்காப்புக்காக என்கவுண்டர் நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.